Wikipedia

Search results

Friday, July 21, 2017

இரவு அற்புதமானது

இரவு அற்புதமானது. உடலையும், மனதையும் சாந்தப்படுத்தி ஓய்வுக்கு வழிவகுக்கும் வகையில் இயற்கை தந்த வரம் தான் இரவு.
காலையில் எழுவதும், இரவில் உறங்குவதும் தான் எப்போதும் நல்லது, தற்போது பலர் இரவு நேரத்தில் சரியாக உறங்குவது கிடையாது. இதனால் உடல் மற்றும் மன நலன் இரண்டிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நம்மில் பலர் இரவு நேரத்தில் பல்வேறு லைஃப்ஸ்டெயில் தவறுகளைச் செய்கிறோம். இவற்றை கண்டுணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் எல்லா இரவும் இனிய இரவாக அமையும்.

இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் செல்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவானது இரைப்பையில் சராசரியாக 2-3 மணி நேரம் இருக்கும். சாப்பிட்டவுடன் படுக்கும்போது, இரைப்பையில் இருந்து சில நேரங்களில் சிலருக்கு உணவுக்குழாய்க்குள் உணவு மேலேறி வந்துவிடலாம். தொடர்ந்து நாட்கணக்கில் இப்படிச் சாப்பிட்டு வரும்போது எதுக்களித்தல் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. தவிர செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிலும் சுணக்கம் ஏற்படலாம்.

இரவு நேரங்களில் தற்போது ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடில்ஸ் போன்ற ஃபாஸ்ட்புட் உணவுகளைச் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற இடங்களில் மிட்நைட் பிரியாணி ஃபேமஸாகி வருகிறது. இரவு நேரத்தில் எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட, எண்ணெயில் பொறிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் செரிமானத்தை பாதிக்கும்போது, நமக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. இட்லி, இடியாப்பம் முதலான எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடுங்கள். அரிசி, கோதுமை, சிறுதானிய உணவுகளோடு, காய்கறிகள் அதிகம் சேர்க்கப்பட்ட கூட்டு, குருமா, தேங்காய் சட்னி, புதினா சட்னி ஆகியவற்றை சாப்பிடலாம். மைதாவால் செய்யப்பட்ட உணவுகள், கீரை வகைககள் தவிர்க்கவும். முட்டை, பால் முதலான அதிக புரதச் சத்து நிறைந்த உணவுகளை அளவாகச் சாப்பிடவும்.

இரவு நேரத்தில் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை பற்றி அதிகம் பேச வேண்டாம். இரவு நேரத்தில் குடும்பத்தோடு அமர்ந்து ஒன்றாகச் சாப்பிடுங்கள். குழந்தைகள் மற்றும் இணையுடன் அன்போடு பேசுங்கள். காலை முதல் மாலை வரை பல டென்ஷன்களை சந்தித்துவிட்டு, இரவிலும் டென்ஷன் தரக்கூடிய வாக்குவாதங்கள் வேண்டாம். ரிலாக்ஸ்சாக தூங்கச் செல்லுங்கள்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு எப்போதோ ஓரிருமுறை நைட் ஷோ செல்வதில் தவறில்லை. ஆனால் அடிக்கடி நைட் ஷோ செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் வன்முறை தெறிக்கும் படங்கள், திகில் படங்கள், மனதை கடுமையாக பாதிக்கும் படங்கள் போன்றவற்றை தவிருங்கள். பாசிட்டிவ் மனநிலையை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை பாருங்கள். பிடித்த இசையை கேட்பது, காமெடி சானல்கள் பார்ப்பது போன்றவற்றில் தவறில்லை.

இரவு எப்போது படுக்கைக்குச் செல்கிறீர்களா அதற்கு 1.5 -2 மணிநேரம் முன்பாக டிவி பார்ப்பதை நிறுத்தி விடுங்கள். தயவு செய்து மொபைல், லேப்டாப், டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நிறுத்தி விடவும். படுக்கையில் படுத்திருக்கும் போது அவசர அவசியமின்றி மொபைலை பயன்படுத்த வேண்டாம். வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றுக்கு சீக்கிரமே குட்பை சொல்லிவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள்.
எங்கே படுத்து உறங்கப்போகீறீர்களோ அந்த இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். காற்றோட்டமான இடமாக அமையுங்கள். தலையணை, மெத்தை போன்றவை சுத்தமாக இருக்கட்டும். வாசனை திரவியங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.ஏசி அறையாக இருந்தால் 23-26 வெப்பநிலையில் வைத்து தூங்குங்கள். போர்வையை நன்றாக துவைத்துச் சுத்தமாக பயன்படுத்துங்கள்.

முடிந்தவரை எவ்வளவு குறைவான உடை அணிய முடியுமோ அப்படி அணிந்து உறங்குங்கள். இறுக்கமான பேண்ட், ஷார்ட்ஸ், உள்ளாடைகள் அணிய வேண்டாம். தளர்வான ஆடைகள் நல்லது. குளிர்காலத்தில் பிரத்யேக ஆடைகளை பயன்படுத்துங்கள்.சரியாக துவைக்காத ஆடைகளை இரவு நேரத்தில் அணிதல் வேண்டாம்.

இரவில் படுக்கையில் தூக்கம் வரவில்லையெனில் கஷ்டப்பட்டு தூக்கம் வரவைக்க முயற்சி செய்து புரண்டு புரண்டு படுக்க வேண்டாம். படுக்கையறையை விட்டு வெளிவந்து இன்னொரு அறையில் உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்யுங்கள், தூக்கம் வருவதாய் உணர்ந்தால் மட்டும் உடனே படுக்கை அறைக்குச் சென்று விடுங்கள். பிடித்தமான வேலை என்றால் உடனே மொபைலை எடுத்து நோண்ட வேண்டாம். புத்தகம் படிப்பது, எழுதுவது முதலான லேசான வேலைகளை செய்யவும்.
இரவு கும்மிருட்டில் தூங்குவது தான் நல்லது. கும்மிருட்டில் தூங்கினால் தான் ஹார்மோன்கள் சீராக சுரக்கும். அவசியம் விளக்கு வெளிச்சம் வேண்டும் என்பவர்கள் மிகக்குறைவான வெளிச்சம் தரும் ஸ்பெஷல் விளக்குகளை பயன்படுத்துங்கள். கடினமான மெத்தைகளுக்கு பதிலாக மென்மையான மெத்தைகளை பயன்படுத்துங்கள்.

இரவு உறங்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக தேவையான அளவு தண்ணீர் அருந்துங்கள். படுக்கைக்கு அருகில் எப்போதும் ஒரு பாட்டில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். படுக்கை அறையில் எப்போதுமே ஒரு முதலுதவி பெட்டியும் இருக்கட்டும்.

இந்த இரவு இனிய இரவாக இருக்கட்டும்!

No comments:

Post a Comment